கோவை: அதிமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்படாதது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய விளக்கம் அளித்துள்ளார். கட்சியில் எந்தப் பதவியும் தேவையில்லை, அதிமுக தொண்டராகவே தொடர்ந்து செயல்படுவோம் என்று கடிதம் மூலம் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி கூறியதாவது: நாங்கள் அளித்த கடிதத்தில் அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் பணியாற்றியவர்கள். எடப்பாடி பழனிசாமிக்காக களத்தில் உழைத்தவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை. அதனால்தான் நானும், நத்தம் விஸ்வநாதனும் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அனைவரும் பதவிகள் வேண்டாம், அதிமுக தொண்டர்களாகவே தொடர்கிறோம் என்று தெரிவித்துள்ளோம்” என்றார்.
மேலும், நாங்கள் அதிமுக உறுப்பினர்களாகவே தொடர்ந்து செயல்படுகிறோம் என்பதை கடிதத்தில் தெளிவாக கூறியுள்ளோம். மகளிரணி கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எப்போதும் அழைப்பார். ஆனால் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை. இருப்பினும், அதற்கு முன்பே நாங்கள் எங்கள் முடிவை கடிதம் மூலம் தெரிவித்து விட்டோம். அதனால்தான் அழைப்பு வரவில்லை என்று நினைக்கிறோம் என்றார். நான் பயன்படுத்திய “ஜாம்பவான்கள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் வேறு. “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமிக்காக தேர்தல் களத்தில் பணியாற்றியவர்கள், கட்சியை வளர்த்த மூத்த நிர்வாகிகள் என்ற பொருளில்தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். கடந்த 4 ஆம் தேதி பதவி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது கொடுக்கவில்லை. அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்டவர்களிடமே கேளுங்கள். எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இன்னும் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச் செயலாளர் செயல்பட வேண்டும் என்றார்.











