சென்னை: தவெக அரசுக்கு எதிராக பாஜக, திமுக, அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து ஒரே நாளில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து புகார் வாசித்த நிலையில், இன்றே, ஆளுநரை நேரில் சந்தித்துள்ளார் டெல்லியின் தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக,மாநில அரசு சார்பாக டெல்லியில் சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது வழக்கம். இது, அமைச்சர் பதவிக்கு இணையானது. அந்த வகையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு நியமித்துள்ளது.

முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரும், அவரது நண்பருமான ஒருவரை, அதுவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து இருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, காவிரி பிரச்சனை மேகதாது விவகாரம் இரு மாநிலத்துக்கும் இடையே உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்திருப்பது, அந்த வழக்கின் போக்கையே மாற்றலாம் என்று விமர்சிக்கப்படுகிறது. இந்த நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா இன்று (ஜூலை 4) ஆளுநர் ஆர்லேகரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது என்னென்ன விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
முன்னதாக இன்று திமுக, அதிமுக, பாஜக என முக்கிய அரசியல் கட்சிகள் தவெக அரசு மீது குற்றம்சாட்டி அடுத்தடுத்து புகார் மனுக்களை ஆளுநர் அர்லேகரிடம் அளித்தன. தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து புகார் அளித்தன. திமுக தரப்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி வில்சன், முன்னாள் எம்.எல்.ஏ., எழும்பூர் பரந்தாமன் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். அதிமுக தரப்பில் சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி ஆகியோர் ஆளுநரைச் சந்தித்தனர். முன்னதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து தவெக அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர்.









